×

அழகிய திருடி நிரஞ்சனி!

அப்பா என்னை இயக்குநராக உருவாக்கி அழகு பார்க்க நினைத்தார். எனக்கோ காஸ்ட்யூம் டிசைனராக வரணும்னு ஆசை. ஆனால் காலம் என்னை இப்போது ‘கண்ணும் கண்ணும் கொளையடித்தால்’ படத்தின் நாயகியாக மாற்றியுள்ளது. இந்த புதிய அடையாளம் எனக்கு பிடித்திருக்கிறது’’ என்கிறார் நிரஞ்சனி. இவர் ‘சென்னை-28’ விஜயலட்சுமியின் உடன் பிறந்த சகோதரி. இயக்குநர் அகத்தியனின் கடைக்குட்டி. படம் ஹிட்டடித்த மகிழ்ச்சியில் இருந்தவரிடம் பேசினோம்.

சினிமா குடும்பம் என்பதால் உங்களுக்கும் சினிமா ஆசை வந்ததா?

எங்கள் குடும்பமே சினிமா குடும்பம் என்பது அனைவருக்கும் தெரியும். அப்பா இயக்குநர். பெரிய அக்கா கார்த்திகா சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர். அவர் கணவர் திருவும் ஒரு இயக்குநர். சின்ன அக்கா விஜயலட்சுமி நாயகியாக ஏராளமான படங்களில் நடித்தவர். அந்தவகையில் எங்கள் குடும்பத்தையும் சினிமாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. சினிமாவைத் தாண்டி எதையும் யோசிக்கமுடியாத இடத்தில்தான் நாங்கள் இருந்தோம். நான் சினிமாவுக்கு வர முக்கியமான காரணம் அப்பா. அவரைப் போல் நானும் இயக்குநர் ஆகவேண்டும் என்று நினைத்தார்.

எனக்கு அதில் ஆர்வமில்லை. படிச்சது பி.எஸ்ஸி என்றாலும் காஸ்ட்யூம் டிசைனிங் ஆர்வம் அதிகம் வந்துச்சு. அதற்கு காரணம் டிகிரி முடித்ததும் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பொறுப்பாளராக இருந்தேன். அப்போது சில சமயம் காஸ்ட்யூமர் வராத நிலையில் அந்த வேலையை நானே எடுத்துச் செய்ய ஆரம்பித்தேன். அப்படித்தான் நான் காஸ்ட்யூம் டிசைனராக மாறினேன்.

அப்போது அக்கா நடித்த ‘கற்றது களவு’ படத்தில் காஸ்ட்யூம் பண்ண வாய்ப்பு கிடைத்தது. நானும் அதில் வேலை செய்தேன். ஆனால் நேரடியாக ஒரு துறையில் இறங்காமல் முதலில் பயிற்சி பெறுவது நல்லா இருக்கும் என்று நினைத்தேன். பிரபல காஸ்ட்யூம் டிசைனர் நளினி ராம் மேடத்திடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அவரிடம் ‘முப்பொழுதும் கற்பனைகள்’ படத்தில் சேர்ந்தேன். விஜய், நயன்தாரா என்று பிரபல நடிகர், நடிகைகளின் படங்களில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் ‘மனம்’ படம் முடிந்த சமயத்தில் வெளியே வந்துவிட்டேன்.

காஸ்ட்யூமராக நீங்கள் வேலை செய்த முதல் சினிமா?


விக்ரம் பிரபு நடித்த ‘சிகரம் தொடு’ என்னுடைய முதல் படம். தொடர்ந்து ‘காவியத்தலைவன்’, ‘கதகளி’, ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘பென்சில்’, ‘கபாலி’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்று குறுகிய காலத்தில் ஏராளமான படங்கள் பண்ணினேன்.  ‘கபாலி’யில் ரஜினி சார் தவிர மீதமுள்ள அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் நான்தான் காஸ்ட்யூம் பண்ணினேன். அந்தப் படத்துக்கு ஏராளமான விருதுகள் கிடைத்தது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...?

நான் சொந்தமாக பொட்டிக் வைத்திருக்கிறேன். அப்போது என்னுடைய கடை விளம்பரத்தில் நடிப்பதற்காக மாடல் தேடும்போது உடனிருந்தவர்கள் ‘நீங்களே நடியுங்கள்’ என்று சொன்னார்கள். விருப்பமில்லாமல், மேக்கப் இல்லாமல் நானே நடித்தேன். அந்த வீடியோவை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஒளிப்பதிவாளர் கே.எஸ்.பாஸ்கரன் சார் பார்த்துவிட்டு ஸ்ரேயா கேரக்டருக்கு இவங்க சரியாக இருப்பாங்க என்று இயக்குநர் தேசிங்கு பெரியசாமி சாரிடம் சொல்லியுள்ளார். அப்படித்தான் நடிக்க வாய்ப்பு வந்தது.

பட அனுபவம் எப்படி?

காஸ்ட்யூமராக ஏற்கனவே நல்ல அனுபவம் உண்டு என்றாலும், நடிகையாக கேமராவுக்கு முன்பாக நின்றபோது கொஞ்சம் படபடப்பாகத்தான் உணர்ந்தேன். சில காட்சிகளில் அந்த படபடப்பு முகத்தில் அப்பட்டமாகத் தெரிவது இப்போ படம் பார்க்குறப்போ எனக்கே தெரிகிறது. நான் வரும் காட்சிகளில் முதலில் டெல்லி போர்ஷனை எடுத்தார்கள். படத்துல கோவா சீன்ஸ் கொஞ்சம்  ஜாலி போர்ஷன். டெல்லி காட்சிகள் ஒரே அறையில் எடுத்ததால் கொஞ்சம் நெர்வஸாக இருந்தது. துல்கர், ரித்து என்று காம்பினேஷன் ஷாட். நானோ முன் பின் கேமரா முன்னாடி நின்றதில்லை. அந்தக் காட்சியில் எப்படி நடித்தேன் என்று இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. அதற்கு டீம் உதவியாக இருந்தது.

துல்கர் எப்படி?

இந்தப் படத்தில் அவர்தான் எனக்கு எனர்ஜி டானிக். என்னால் நடிக்க முடியும் என்று நம்பிக்கை கொடுத்தார். என்னை எப்போதும் மோட்டிவேட் செய்யும் விதமாக ‘என்னுடைய முதல் படத்தில் உங்கள் அளவுக்குக் கூட நான் பண்ணியிருக்கமாட்டேன். உங்களைவிட அதிகமாக நெர்வஸ் ஆகியுள்ளேன்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். ரொம்ப ஃப்ரெண்ட்லி கேரக்டர். எப்போதும்  இனிமையான வார்த்தைகள் பேசி சக நடிகர்களை கம்ஃபோர்ட் சோன்ல வைத்திருப்பார். எனக்காக நிறைய ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்தார். Lovely work with him.

படத்தில் உங்களுக்கு எந்த இடத்தில் சவால் காத்திருந்தது?

ஓட்டல் சீன் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ரக்‌ஷனுக்கு தலைவர் பாடல் வரும் அந்தக் காட்சி டஃப்னு சொல்லலாம். அதில் நான் மட்டும் டயலாக் பேசுவேன். எல்லோரும் என்னை வேடிக்கை பார்ப்பது போல் காட்சி. அந்த காட்சிக்காக ஹோம் ஒர்க் பண்ணி நடித்தேன். ரொம்பவும் பயந்து நடித்தேன். நைட் படப்பிடிப்பு வேறு. அது ரவுண்ட் டிராலி ஷாட். நல்ல வேளை டேக் அதிகம் போகவில்லை. படம் பார்த்தவர்கள் ‘நல்லா இருந்தது’ என்றார்கள். முதல் படத்திலேயே திருடியாக நடிக்கிறோமே என்கிற ஃபீல் இருந்தது. ஆனால், படம் பார்த்தவர்கள் எல்லாம் அழகிய திருடின்னு பாராட்டுறாங்க.

ஒரே சமயத்தில் நடிப்பு- காஸ்ட்யூம்ஸ்னு ரெண்டு வேலையையும் எப்படி டீல் பண்ணினீர்கள்?

காஸ்ட்யூம்ஸ் எனக்கு பிடித்தது என்பதால் அதை விடக்கூடாது என்று நினைத்தேன். அதே சமயம் எனக்கு கிடைத்த வாய்ப்பு பெரியது என்றதால் அதில் பெயர் வாங்கவேண்டும் என்று நினைத்தேன். இந்தப் படத்தில் நடிக்கத்தான் கமிட்டானேன். காஸ்ட்யூம் பண்ண இயக்குநரிடம் சான்ஸ் கேட்டேன். அவரும் டீமுடன் டிஸ்கஸ் பண்ணிவிட்டு என்னையே காஸ்ட்யூம்ஸ் பண்ணச் சொல்லிட்டார்.

படத்தில் துல்கர், ரித்து, கெளதம் வாசுதேவ் மேனன் உட்பட அனைவருக்கும் நான்தான் காஸ்ட்யூம்ஸ் பண்ணினேன். எல்லோரும் சிறப்பாக கோ-ஆபரேஷன் கொடுத்தார்கள். சின்னச் சின்ன கரெக்‌ஷன் இருந்தாலும் எனக்கு தொந்தரவு கொடுக்காமல் என் உதவியாளர்களிடம் சொல்லி சரி செய்துகொண்டார்கள்.

படம் பார்த்துவிட்டு வீட்லே என்ன சொன்னாங்க?

அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். அப்பா சென்னைக்கு 30 ரூபாயுடன் வந்ததாக சொல்வார். சகோதரிகள் நாங்கள் மூவரும் நல்ல நிலையில் இருப்பதில் அவருக்கு ஆனந்தம் அதிகம். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஒரே சமயத்தில் ஆக்டிங், காஸ்ட்யூம் இரண்டையும் எப்படி டீல் பண்ணினேன் என்பதில் அவருக்கு ஆச்சர்யம். படத்தில் என் நடிப்பை மட்டும் பாராட்டாமல் இயக்குநர் தேசிங்கின் மேக்கிங் திறமையையும் வியந்து பாராட்டினார்.

அக்கா இருவரும், ‘ரொம்ப நல்லா பண்ணியிருக்கே. முதல் படம் மாதிரி தெரியலை’ என்றார்கள். இன்னும் சிலர் ஹாலிவுட் நடிகைகளோடு இணைத்து பாராட்டினார்கள். அதைக் கேட்டு சந்தோஷப்படுவதோடு சரி. அந்த இடத்துக்கு வர கடுமையாக உழைக்கணும்.

ஒரு படத்தில் காஸ்ட்யூம் டிசைனரின் பங்களிப்பு என்ன?

டயலாக் ஓரியண்டட் படமாக இருந்தாலும் சரி, ஆக்‌ஷன் ஓரியண்டட் படமாக இருந்தாலும் சரி, காஸ்ட்யூம் டிசைனரின் பங்கு முக்கியம். வசனம் பேசும்போது உடை இறுக்கமாக இருந்தால் கைகளை வீசி பேசமுடியாது. அத்துடன் நடிகர்களிடம் சிறந்த நடிப்பு வெளிப்பட காஸ்ட்யூமின் தேவை முக்கியமானது. எப்படி என்றால், பொதுவெளியில் நாம் நார்மல் உடை அணிந்து செல்லும்போது நம் மனநிலை சற்று டல்லாக இருக்கும்.

அதே கலர்ஃபுல்லாக உடை அணிந்து செல்லும்போது மனம் உற்சாகமாக இருக்கும். அதுபோன்று திரையில் தோன்றும் நடிகர்களின் திறமை வெளிப்பட மனநிலை முக்கியமாக பார்க்கப்படுவதால் அங்கு உடையின் பங்களிப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் காஸ்ட்யூம்ஸ் டிசைனிங்கிற்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து சென்றுவிடுகிறார்கள். நாங்களும் பிற டெக்னீஷியன் போல்தான் உழைக்கிறோம்.

உங்கள் காஸ்ட்யூமுக்கு பாராட்டு கிடைத்துள்ளதா?

நிறைய. குறிப்பா ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு உயர்தர பருத்தி சட்டைகளை டிசைன் பண்ணிக்கொடுத்தேன். அவர் ‘நல்லா இருக்கு’ என்றார். அப்படி நிறைய பேர் பாராட்டியுள்ளார்கள். நான் ஒர்க் பண்ணிய ஆர்ட்டிஸ்ட்கள் அனைவரும் மீண்டும் தங்களுக்கு ஒர்க் பண்ண விருப்பம் தெரிவித்ததையே எனக்கான அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.

நடிகைகளில் யாருடைய டிரெஸ்ஸிங் சென்ஸ் நல்லா இருக்கு?

வேற யாரு... நயன்தாரா மேடம். அவருக்கு நான் ரசிகையும் கூட. அவருடைய டிரெஸ்ஸிங் சென்ஸ் சூப்பராக இருக்கும். எந்த வண்ணமும், எந்த உடையும் அவருக்கு பொருத்தமாக இருக்கும்.

இனிமேல் நடிப்பா, காஸ்ட்யூமா?

இப்போது நடிப்பு எனக்கு பிடிச்சிருக்கு. ரசிகர்கள், சினிமா துறையினர் பாராட்டு பரவலாகக் கிடைத்துள்ளது. இந்த வெற்றியை அலட்சியப்படுத்தாமல் நடிகையாகத் தொடர்வேன். காஸ்ட்யூம் என்பது எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம். இதுவரை பலருக்கு நான் டிசைனிங் பண்ணினேன். இப்போது அடுத்தவர்கள் எனக்கு எப்படி டிசைனிங் பண்ணுகிறார்கள் என்பதைப் பார்க்க ஆசையாக இருக்கிறேன்.

Tags : Niranjani ,
× RELATED நிரஞ்சன் மார்டி இந்த மாதம் ஓய்வு புதிய...